பாக். உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு : நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கை விசாரித்தவர்!!
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஊழல் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப்.
இவரும், குடும்பத்தினரும் முறைகேடாக சொத்து சேர்த்தது தொடர்பான ஊழலை பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியது.
இது தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நவாசை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இதனால், நவாஸ் பதவி இழந்தார்.
இந்த அமர்வில் நீதிபதி இஜாஸ் உல் அசானும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், நீதிபதி இஜாஸ் வீட்டின் மீது மர்ம நபர்கள் நேற்று அதிகாலை இரண்டு முறை துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லாகூரில் உள்ள மாடல் டவுன் பகுதியில் அமைந்துள்ள நீதிபதி இஜாஸ் வீட்டின் மீது அதிகாலை 4.30 மணிக்கும், பிறகு காலை 9 மணிக்கும் மர்மநபர்கள் சுட்டனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் உடனடியாக நீதிபதி இஜாஸ் வீட்டிற்கு விரைந்தார்.
இந்த தாக்குதல் நீதிபதி இஜாசை கொல்வதற்காக நடத்தப்பட்டதா அல்லது வான்வழி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வீட்டின் நுழைவு வாயில் மற்றும் சமையலறை கதவில் குண்டுகள் பாய்ந்துள்ளன.
Average Rating