வங்கதேச வங்கிக்கு அமைதிக்கான நோபல்! & துருக்கி எழுத்தாளருக்கு நோபல் பரிசு!!
2006ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற வங்கதேசத்தைச் சேர்ந்த கிராமீன் வங்கியும், அதன் நிறுவனர் முகம்மது யூனுஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வறுமையை ஒழிக்க பாடுபட்டதற்காக கிராமீன் வங்கிக்கும், அதன் நிறுவனருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பா ஓஸ்லோ நகரில் நோபல் பரிசுக்கான குழு வெளியிட்ட அறிக்கையில், உலகில் வறுமையை ஒழிக்க கிராமீன் வங்கியும், அதன் நிறுவனர் முகம்மது யூனுஸும் தீவிரமாக பாடுபட்டு வருகிறார்கள். கலாச்சாரங்கள், நாகரீகங்களை கணக்கில் எடுக்காமல் உலகம் முழுவதும் வறுமை ஒழிய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அவர்கள் பாடுபட்டு வருகிறார்கள்.
வறுமையில் உழலும் மக்கள் அதிகம் பேர் இருக்கும் வரையில் உலகில் அமைதி நிலவ முடியாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் யூனுஸ் செயல்பட்டு வருகிறார். வறுமையை ஒழித்தால்தான் அமைதியைக் கொண்டு வர முடியும் என்ற அவரது எண்ணம் பாராட்டத்தக்கது. உலக அமைதிக்கு பாடுபடும் இவர்களைத் தவிர வேறு யாருக்கும் இந்த விருதை கொடுப்பது பொருத்தமாக இருக்காது என்று அந்த அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளது.
அமைதி விருதுக்கு இந்த ஆண்டு 191 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அதிர்ஷ்டம் வங்கதேசத்திற்குக் கிடைத்துள்ளது. டிசம்பர் 10ம் தேதி ஓஸ்லோவில் நடைபெறும் நிகழ்ச்சியில் நோபல் பரிசுகள் வழங்கப்படும்.
விருது குறித்து யூனுஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். யூனுஸ் நிறுவிய கிராமீன் வங்கி, ஏழைகள், விவசாயிகள், மீனவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் வறுமையில் வாடுவோருக்கு கியாரண்டி எதுவும் கேட்காமல் கடன் வழங்கி அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவி வருகிறது. இதுவே இப்போத அமைதிக்கான நோபல் பரிசைப் பெற அந்த வங்கிக்கு உதவியுள்ளது.
துருக்கி எழுத்தாளருக்கு நோபல் பரிசு:
துருக்கி நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர் ஓரான் பமூக் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெறுகிறார். இஸ்தான்புல் நகரைச் சேர்ந்தவர் பமூக்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கான நோபல் பரிசுகளில், அறிவியல், மருத்துவம் மற்றும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகளை அமெரிக்கர்களே இந்த ஆண்டு தட்டிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.