மட்டக்களப்பில் இரண்டு புலி உறுப்பினர்கள் படையினரால் சுட்டுக்கொலை
மட்டக்களப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் செங்கலடி குமாரவேலியார் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் களுவங்கேணி-02 ஐச் சேர்ந்த கண்ணப்பன் இராசையா ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார் காயமடைந்த மேலும் இரு புலிகள் இயக்கத்தினரை செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் அங்கு சிகிச்சை பலனின்றி மற்றொரு புலி உறுப்பினரான கணபதி கிராமம் ரமேஸ்புரம் செங்கலடியைச் சேர்ந்த பாக்கியராஜா சுபரூபன் (வயது 18) என்பவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து படையினரும் அப்பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது, 08 கைக்குண்டுகள், 03 சயனைட் வில்லைகள் மற்றும் புலிகளின் இலக்கத் தகடுகள் 03 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை வாழைச்சேனை பண்டிமடு விநாயகபுரம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் விஜயகுமார் (வயது 30) என்பவரது சடலம் அரசாங்கச் செலவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 15ம் திகதி முதல் காணமால் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.