வவுனியாவில் இரு சகோதரர்கள் வெள்ளை வானில் வந்தோரால் துவக்கு முனையில் கடத்தப்பட்டனர்.
வவுனியா மரக்காரம்பளை கணேசபுரம் பகுதியில் நேற்று புதன்கிழமை அதிகாலை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் வெள்ளை வானில் வந்தோரால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
வவுனியா – மன்னார் வீதியில் வவுனியா நகரிலிருந்து சுமார் 4 கிலோ மீற்றர் து}ரத்திலிருக்கும் கணேசபுரம் பகுதியில் அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆயுதங்கள் சகிதம் வெள்ளை வானொன்றில் சென்ற சிலர் வீட்டினுள் பலவந்தமாக நுழைந்து, தாய் – தந்தை உட்பட அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கயிறுகளால் அனைவரையும் கட்டி விட்டு இரு சகோதரர்களையும் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.
ஆட்டோ மெக்கானிக்கான கிளி என அழைக்கப்படும் முத்துக்குமார் தேவராஜ் (35 வயது) என்பவரும் இவரது இளைய சகோதரரான கிருஷ்ணராஜ் (20 வயது ) என்பவருமே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக குடும்பத்தவர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.