இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய தரப்பினர் மனிதாபிமான கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் -கனடா
இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய தரப்பினர் துரிதமான தீர்மானமொன்றிற்காக செயற்படுவதுடன் மனிதாபிமான கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமென்று கனடா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் மனித அவலங்கள் தொடர்பாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் லோரன்ஸ் கெய்னோன் அறிக்கையொன்றினை இன்று வெளியிட்டுள்ளார். இலங்கை நிலவரம் குறித்து கனடா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் மனித அவலங்களுக்கு துரித தீர்வு காணப்படுமென்று அனைத்துக் கனேடியர்களும் நம்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் அவசியமென்று கனடா வலியுறுத்தியுள்ளது. மோதல் இடம்பெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சுதந்திரமாகவும் சுயமாகவும் நடமாட இரண்டு தரப்பினரும் அனுமதிக்க வேண்டுமென்றும், உதவியை எதிர்பார்த்திருக்கும் மக்களை பார்ப்பதற்கு மனிதாபிமானப் பணியாளர்கள் பாதுகாப்புடனும் தடையின்றியும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள எஞ்சிய பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதை தடுப்பதை புலிகள் நிறுத்த வேண்டுமென்றும், அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டுமென்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் தனது அறிக்கையின் மூலம் கேட்டுள்ளார். இலங்கையின் சமாதானத்திற்கான நகர்வுகள் குறித்து தொடர்ந்தும் தமது நாடு கருத்துக்களை வெளியிடுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating