பாகிஸ்தானில் அல்-காய்தா தாக்குதல்
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்குப் பகுதியில், அல்-காய்தா ஆதரவாளர்களின் தாக்குதல் தொடர்கிறது. வசீரிஸ்தான் என்ற பழங்குடி பகுதியில் மீர் அலி என்ற இடத்தில் சாலையோரம் போடப்பட்டிருந்த வெடிகுண்டு வியாழக்கிழமை திடீரென வெடித்தது. ராணுவ ரோந்து வாகனத்தை குறிவைத்து அதை வைத்திருந்தனர். ஆனால் அந்த வாகனம் கடந்த பிறகே குண்டு வெடித்தது. இதையடுத்து மீண்டும் அங்கு வந்த ஜவான்கள், தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் நடந்து சென்ற ஒருவர் காயம் அடைந்தார்.
அராபியர்கள், மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்கள், ஆப்கானிஸ்தானத்தவர்கள் என்று மதத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவர்கள் பலர் தலிபான்கள், அல்-காய்தா ஆகியோரின் அழைப்புக்குச் செவிமடுத்து வசீரிஸ்தான் வந்துள்ளனர். அவர்களின் முதல் இலக்கு பாகிஸ்தானிய ராணுவம் மற்றும் துணை நிலைப் படைகளாகும்.
கோரிக்கை: வசீரிஸ்தான் பகுதியில் இஸ்லாமியச் சட்டப்படி ஆட்சியை நடத்த வேண்டும், பாகிஸ்தான் ராணுவம் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பது அவர்களின் முக்கியமான கோரிக்கைகளாகும்.