தென் கிழக்கு சீனத்தில் கனமழை: 55 பேர் சாவு; 12 பேரைக் காணவில்லை
சீன நாட்டின் தென் கிழக்குப் பகுதியில் ஃபூ ஜியான், குவாங் டாங், கிய் ஷோவ் ஆகிய 3 மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைக்கு 55 பேர் பலியாகியுள்ளனர், 12 பேரைக் காணவில்லை.
சீன நாட்டில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை பருவமழை காலம் என்றாலும் இந்த ஆண்டு பருவமழை சற்று முன்னதாகவே ஆரம்பித்துவிட்டது. அந்த மழையும் ஆரம்பத்திலேயே இந்த அளவுக்கு பலமாகப் பெய்வது கடந்த 30 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. சீன நாட்டிலும் மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாக காடுகளும் மலைகளும் சேதம் அடைந்து வருகின்றன. தேவைகளுக்காக காடுகளிலும் மலைகளிலும் ஏராளமான மரங்களை வெட்டுவது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. இதனால் மலைகளில் மழை நீரைத் தடுக்கவோ, மழை வேகத்தைத் தாங்கவோ இயற்கை தடுப்புகள் இல்லாமல் போய்விட்டது. எனவே மலைப்பகுதிகளில் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
ஃபூ ஜியான் மாநிலத்தில் “”மின்” ஆற்றில் இதுவரை இருந்திராத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் அதே சமயம், மழையும் வலுத்து வருகிறது. எனவே மழை நீர் வடிய இடமோ, அவகாசமோ இல்லை. கடந்த 50 ஆண்டுகளில் இந்த அளவு மழை பெய்ததில்லை என்று சில பகுதிகளில் அதிகாரிகளே தெரிவிக்கும் அளவுக்கு மழைப் பொழிவு பதிவாகியிருக்கிறது.