இலங்கைக்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் இந்தியா
அடுத்த மாதம் சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை அரசாங்கத்திடம் மூன்று நிபந்தனைகளை விதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பதற்கு, சிறிலங்காவிடம் மூன்று நிபந்தனைகள் குறித்து அழுத்தம் கொடுக்க புதுடெல்லி தயாராகி வருகிறது.
அடுத்தமாத முற்பகுதியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான, உயர்மட்டக் குழு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தப் பயணத்தின் போது, இலங்கை அரசாங்கத்திடம், சல்மான் குர்ஷித் இந்த மூன்று நிபந்தனைகளையும் வாய்மொழியாகத் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை 13வது திருத்தச்சட்டத்தை தொடர வேண்டும். 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக, எந்த திருத்தமோ, அதிகாரக் குறைப்பையோ மேற்கொள்ளக் கூடாது என்பது முதல் நிபந்தனை.
இந்திய மீனவர்கள், மீன்பிடிப்பதற்கு இலங்கை கடற்படை கடைப்பிடித்து வரும் கைது உள்ளிட்ட கெடுபிடிகளைத் தளர்த்த வேண்டும் என்பது இரண்டாவது நிபந்தனை.
சம்பூர் அனல் மின் நிலைய உடன்பாடு குறித்து உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்பது மூன்றாவது நிபந்தனை.
இந்த மூன்று நிபந்தனைகளுக்கும் இலங்கை அளிக்கவுள்ள பதிலைப் பொறுத்தே, இந்தியப் பிரதமர் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Average Rating