கலம் மக்ரேவின் கிளிநொச்சி பயணம், அனுராதபுரம் நகரை கடக்க முடியவில்லை!
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டு செய்திகளை கவர் செய்வதற்காக கொழும்பு வந்திருந்த ‘நோ ஃபயர் ஸோன்’ ஆவணப்பட இயக்குனர் கலம் மக்ரே, சேனல்-4 டீமுடன் நேற்று கிளிநொச்சி செல்ல முயன்றபோது, அவரது பயணம் அனுராதபுரம் ரயில்வே ஸ்டேஷனோடு முடிந்து போனது.
கொழும்புவில் இருந்து வவுனியாவை நோக்கி சென்ற ரயிலில் அவரும் சேனல்-4 குழுவினரும் பயணம் செய்த தகவல் எப்படியோ வெளியே தெரிய வந்திருந்தது. அதையடுத்து, அனுராதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் சுமார் 1000 பேர் இந்த ரயிலை மறித்தனர். சுமார் 2 மணி நேரம் ரயில் நகர முடியாமல் அங்கு நின்றிருந்தது.
இதையடுத்து அங்கு வந்த போலீஸார், சேன்ல்-4 குழுவினரை தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. திரும்பவும் கொழும்பு செல்லுமாறு கூறினர்.
கொழும்புவில் இருந்து வடக்கே செல்லும்போது, பொல்காவல, குருணாகல, மகோ ஆகிய பிரதான ரயில்வே நிலையங்களின்பின், அனுராதபுரம் ரயில்வே நிலையத்தை ரயில் சென்றடையும். அங்கிருந்து மதவாச்சி என்ற பிரதான ரயில் நிலையத்தை கடந்து சென்றால், வவுனியாவை சென்றடையலாம். இதற்கு இடையே சிறிய ரயில்நிலையங்கள் சில உள்ளன. வவுனியாவில் இருந்து சுமார் 2 மணி நேர பயணத்தில் கிளிநொச்சி உள்ளது.
அனுராதபுரம் ரயில்வே நிலையத்தில் சேனல்-4 குழுவினரை சந்தித்த போலீஸார், அங்கிருந்த வவுனியா வரை அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் ரயிலை மறிப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாராக இருப்பதாக குறிப்பிட்டு, சேனல்-4 குழுவினருக்கு கொழும்பு திரும்புவதே ஒரே வழி என கூறினர்.
இதையடுத்து, கலம் மக்ரே உட்பட சேனல்-4 குழுவினர், வீதி மார்க்கமாக போலீஸ் பாதுகாப்புடன் கொழும்பு திரும்பினர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை ஊடகத்துறை அமைச்சர் கெஹிலிய ரம்புக்கெல, “கலம் மக்ரேவுக்கு விசா கொடுக்க கூடாது என்ற குரல்கள் எழுந்த நிலையில், நாம் அவருக்கு விசா வழங்கினோம். இதனால், அவரது பாதுகாப்பையும் நாம்தான் கவனிக்க வேண்டியுள்ளது. அனுராதபுரத்தில் இருந்து தொடர்ந்து வடக்கே பயணம் செய்வது அவருக்கு பாதுகாப்பானது அல்ல. அவரைப் பொறுத்தவரை அங்கே நிலைமை சரியில்லை.” என்றார்.
Average Rating