எகிப்தில் கலவரம், 50பேர் கொலை
எகிப்து நாட்டில், ஜனநாயக எழுச்சி தினத்தில், ஏற்பட்ட கலவரத்தில், 50 பேர் கொல்லப்பட்டனர்.
எகிப்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக இருந்த, ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக, 2011ல், மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது. பல மாதங்கள் நீடித்த போராட்டத்தில், முபாரக் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்;.
எதிர்க்கட்சியை சேர்ந்த, முகமது முர்சி அதிபராக பொறுப்பேற்றார். பொருளாதார சீரழிவு, வறுமை, வேலையின்மை, வன்முறை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட அந்நாட்டை, அதிபர் முர்சி தலைமையிலான அரசு சரி செய்து விடும் என, மக்கள் நம்பினர்.
ஆனால், அவரும், மற்றொரு ஹோஸ்னி முபாரக் போல் உருவெடுத்தார். இதையடுத்து, மீண்டும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த, ஆண்டு, ஜூலை மாதம், ராணுவ புரட்சி மூலம் முர்சி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில், முர்சி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதை தொடர்ந்து, இடைக்கால அரசுக்கு எதிராக முர்சி ஆதரவாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எகிப்து நாட்டின் முக்கிய நகரமான அலெக்சான்டிரியா, கெய்ரோ உள்ளிட்ட நகரங்களில், நேற்று முன்தினம், முபாரக்குக்கு எதிரான எழுச்சி தினம் அனுசரிக்கப்பட்டது.
ராணுவ தளபதி அப்துல் பதா அல்சிசிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, போராட்டக்காரர்கள் கோஷம் போட்டனர். இதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில், 50 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமடைந்துள்ளனர்.
Average Rating