ரெயில் நிலைய வளாகத்துக்குள் சிறுநீர் கழித்தால் ரூ.500 அபராதம்!!
ரெயில் நிலையங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள மத்திய ரெயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ரெயில் நிலைய வளாகங்களில், வெளி இடங்களில் துப்பினாலோ அல்லது சிறுநீர் கழித்தாலோ கடும் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரெயில் நிலைய வளாகங்களில், சுற்றுப் பகுதிகளில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு தற்போது ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இனி ரெயில் நிலைய பகுதிகளில் சிறுநீர் கழித்து பிடிபடுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இந்த 5 மடங்கு அபராதத் தொகை உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எனவே ரூ. 500 அபராத திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
ரெயில் நிலையங்களை மாசுபடுத்தும் வகையில் சிறுநீர் கழிப்பவர்களை டிக்கெட் பரிசோதகர்கள் பிடித்தாலும், அவர்களால் அபராதம் விதிக்க முடியாத நிலை இருந்தது. கெஜடட் ரேங்கில் இருப்பவர்களே அபராதம் விதிக்க முடியும் என்ற நிலை இருந்தது.
இதையும் மத்திய ரெயில்வே வாரியம் மாற்றி உள்ளது. அதன்படி இனி ரெயில் நிலையங்களில் கண்ட, கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு டிக்கெட் பரிசோதகர்களே ரூ. 500 அபராதம் விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்களில் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள ரெயில் நிலையம்தான் மிக, மிக அசுத்தமாக்கப்படுகிறது. அந்த ரெயில் நிலைய வாசல்களின் இருபுறமும் பயணிகள் சிறுநீர் கழித்து விடுகிறார்கள்.
நாளந்தா, புத்தகயாவுக்கு வருபவர்கள் இந்த ரெயில் நிலையம் வந்தே செல்ல வேண்டும். பாட்னா ரெயில் நிலையத்துக்கு செல்பவர்களில் 90 சதவீதம் பேர் துர்நாற்றம் தாங்காமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்லும் நிலையே உள்து.
இதை தவிர்க்க ரூ. 500 அபராத திட்டம் பாட்னா ரெயில் நிலையத்தில் தீவிரமாக நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Average Rating