பிரான்ஸ் போட்டி இறுதியைப் போன்றது – ரொனால்டோ!
பிரான்ஸ் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியை இறுதிப் போட்டியைப் போல நினைத்து சிரத்தையுடன் விளையாடுவோம் என்று பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ கூறியுள்ளார்! உலகக் கோப்பை போட்டிகளில் மிக அதிகமான கோல்களை அடித்த பெருமையைப் பெற்றுள்ள ரொனால்டோ, டார்ட்மண்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார். 1998 ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றது தங்களுடைய மனதைவிட்டு மறைந்துவிட்டது என்றும், இந்த காலிறுதிப் போட்டியில் எங்களுடைய திறமை அனைத்தையும் வெளிப்படுத்துவோம் என்றும் ரொனால்டோ கூறியுள்ளார். இதே கருத்தை பிரேசில் அணியின் ராபர்ட்டோ கார்லோசும் எதிரொலித்துள்ளார். 1998-ஐ நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. இன்று உலக சாம்பியனாக உள்ள நாங்கள், அப்போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடுவோம். இன்றுள்ள நிலையில், உண்மையாகக் கூறுகிறேன் எங்கள் அணி மிகத் திறமை வாய்ந்ததாக உள்ளது என்று கார்லோஸ் கூறியுள்ளார்.