திருச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் முகத்தில் மிளகாய் பொடி தூவி 15 பவுன் நகை கொள்ளை!!
திருச்சி அருகே உள்ள உடையான்பட்டி இ.பி. காலனியைச் சேர்ந்தவர் படையப்பா என்கிற தத்துருப ராஜா (வயது 43) நேற்று இவர் கடைக்கு சென்று விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினார். உடையான்பட்டி ரோட்டில் இருட்டில் சென்ற போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். திடீரென தத்துருப ராஜாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினர்.
இதனால் அவர் நிலை தடுமாறினார். இதைப் பயன்படுத்தி கொண்ட திருடர்கள் தத்துருபராஜா அணிந்திருந்த தங்க செயின்களை பறித்தனர், அவர்களுடன் தத்துருபராஜா போராடினார்.
அப்போது ஆத்திரமடைந்த திருடர்கள் தத்து ருபராஜாவின் மூக்கை கத்தியால் அறுத்தனர். இதனால் அவர் நிலை குலைந்தார். உடனே அவர் கழுத்தில் கிடந்த 15 பவுன் செயின்களை பறித்துக் கொண்டு திருடர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் இரவு 11 மணிக்கு நடந்தது. ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் திருடர்களை பிடிக்க முடியவில்லை.
இது குறித்து தத்துருபராஜா கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.
தத்துருபராஜா எப்போதும் கழுத்தில் அதிக நகைகள் அணிந்திருப்பது வழக்கம். நேற்று இரவு கடைக்கு சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த வாலிபர்கள் அவர் கழுத்தில் கிடந்த நகைகளை நோட்டமிட்டுள்ளனர்.
நகைகளை கொள்ளையடித்தால் பல பவுன் தேறும். பல லட்சம் கிடைக்கும் என்பதால் அவற்றை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். இரவு தத்துருபராஜா வீட்டிற்கு புறப்பட்டதும் அவரை பின் தொடர்ந்து சென்றனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்ததும் தத்துருபராஜா மீது மிளகாய் பொடி தூவி விட்டு நகைகளை பறித்துச் சென்றுள்ளனர். போலீஸ் விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே மூக்கு அறுப்பட்ட தத்துருபராஜா திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கே.கே.நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating