சொத்து தகராறில் தந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற மகன்!!
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தத்தனூர் கீழவெளியை சேர்ந்தவர் சந்தோசம் (வயது 85). விவசாயி. இவருக்கு ஒரு மகள், 4 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சந்தோசம் சொத்தை பாகம் பிரித்து கொடுத்துள்ளார். சந்தோசம் தனக்காக சொத்தில் ஒரு பங்கு தனியாக வைத்துள்ளார். இவர் தற்போது இளைய மகன் செல்வத்தோடு வசித்து வந்தார்.
செல்வம் பாரதீய ஜனதா கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். செல்வத்தின் மனைவி செல்வி பாட்டாளி மக்கள் கட்சியில் மாநில மகளிர் அணி துணைசெயலாளராக உள்ளார்.
சந்தோசத்தின் 3–வது மகன் ராஜாங்கம் தமிழர்நீதி கட்சியில் முன்னாள் மாவட்ட பொருளாளராக இருந்துள்ளார். இவர் சந்தோசிடம் மீதி இருக்கும் சொத்தை பங்குபோட்டு தரும்படி கேட்டுள்ளார். நேற்று காலை 10 மணியளவில் செல்வத்தின் வீட்டிற்கு வந்து ராஜாங்கம் தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் செல்வத்தை ராஜாங்கம் கத்தியால் குத்தினார்.
அப்போது வெளியில் சென்றிருந்த சந்தோசம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது ஆத்திரத்தில் இருந்த ராஜாங்கம் சந்தோசத்தை அடித்து தாக்கினார். பின்னர் சந்தோசத்தின் கழுத்தை அறுத்து போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். தந்தை, மகன் இருவரும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர். உடனடியாக அவர்கள் இருவரையும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சந்தோசம் இறந்தார்.
செல்வத்தை மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குபதிவு செய்து ராஜாங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சொத்துக்காக தனது தந்தையையே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating