கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள்: கலெக்டரிடம் இளம்பெண் கண்ணீர் மனு!!
தேனி மாவட்டம் அல்லி நகரை சேர்ந்தவர் லலிதா (வயது 28). இவர் இன்று காலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தனது குழந்தைகள் நிரஞ்சனா மற்றும் சர்மிளாவுடன் வந்தார். அவர் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து கண்ணீர் மல்க மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
எனக்கும், கோவை ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் குமாரவேல் என்பவருக்கும் கடந்த 2005–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது எனது பெற்றோர் குமாரவேலுவுக்கு வரதட்சணையாக 25 ஆயிரம் ரொக்க பணமும், 25 பவுன் தங்க நகைகளையும் கொடுத்தனர்.
திருமணத்தின்போது குமாரவேல் கோவைப்புதூர் பட்டாலியனில் போலீஸ்காரராக இருந்தார். இதனால் கோவைப்புதூரில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தோம். அப்போது குமாரவேலுவுக்கும், வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்தது. இதை தட்டிக்கேட்ட என்னை குமாரவேல் அவரது தாயாருடன் சேர்ந்து கொடுமைப்படுத்தினார். மேலும் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி என்னை வீட்டை விட்டு வெளியேற்றினார்.
இந்த நிலையில் எனக்கு தெரியாமல் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்த தகவலறிந்ததும் நான் அவரை தொடர்பு கொண்டேன். அவர் என்னுடன் சமாதானம் ஆவது போல் நடித்து கோர்ட்டில் விவாகரத்து வழக்கின் போது ஆஜராகாமல் தடுத்து விட்டார். தொடர்ந்து 3 வாய்தாக்களுக்கும் நான் ஆஜராகாததால் கோர்ட்டில் என் கணவர் குமாரவேலுவுக்கு ஆதரவாக தீர்ப்பாகிவிட்டது. அதை வைத்து அவர் என்னை மிரட்ட ஆரம்பித்தார்.
இது குறித்து அப்போதைய போலீஸ் துணை கமிஷனர் ஹேமா கருணாகரனிடம் மனு கொடுத்தேன். அவர் இதுகுறித்து விசாரணை நடத்தி என் கணவருடன் என்னை சேர்த்து வைத்து அவருக்கு அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து வேடப்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து என்னையும், எனது 2 குழந்தைகளையும் தங்க வைத்தார். அதன்பின்னர் அவர் வீட்டுக்கு வருவதை தவிர்த்துவிட்டார். மேலும் குடும்ப செலவுக்கும் பணம் தர மறுத்துவிட்டார். அவர் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடமும், அவர் வேலை பார்க்கும் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தேன்.
ஆனால் அவர்கள் என் கணவர் குமாரவேலுவையும், அவரது போலீஸ் பணியையும் பாதுகாக்க எனது புகார் மனு மீது உரிய கவனம் செலுத்தவில்லை. என்னையும், என் குழந்தைகளையும் காப்பாற்றும் விதமாக என் கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.
மனுவின் மீது உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்
Average Rating