திருத்தணியில் கழுத்தை அறுத்து மனைவி கொலை: கணவர் போலீசில் சரண்!!
திருத்தணி கே.ஜி. கண்டிகை போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் மோகன் (31). இவர் அதே பகுதியில் கோணி பை கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி நிர்மலா (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடம் ஆகிறது. இந்த தம்பதிக்கு திவ்யா (5), சுபாஷ் (3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
நிர்மலா செல்போனில் அடிக்கடி வேறு யாரிடமோ பேசி உள்ளார். இதனால் மோகன் நிர்மலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் தகராறு செய்து வந்தார். பின்னர் மோகன் நிர்மலாவை அடித்து உதைத்தார். இதனால் நிர்மலா கணவரிடம் கோபித்து கொண்டு அதே பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விடுவார். பின்னர் பெற்றோர்கள் சமாதானம் பேசி நிர்மலாவை மோகனுடன் அனுப்பிவைப்பார்.
இந்த நிலையில் நேற்று இரவு மோகனுக்கும் நிர்மலாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மோகன் நிர்மலாவை கீழே தள்ளி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நிர்மலா கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் நிர்மலா பிணமானார்.
பின்னர் இன்று அதிகாலையில் பஸ் மூலம் திருத்தணி சென்று திருத்தணி போலீசில் மோகன் சரண் அடைந்தார். நடத்தையில் சந்தேகப்பட்டு தனது மனைவியை கொலை செய்து விட்டதாக போலீசில் கூறினார். உடனே போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிர்மலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Average Rating