தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து கெபே முறைப்பாடு!!
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை 114 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கெபே (caffe) அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து கெபே வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இவற்றில் 32 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைகள் பற்றியது. மேலும் குண்டுகள் மற்றும் துப்பாக்கி பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் 9. அத்துடன் மக்கள் சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை குறித்த முறைப்பாடுகள் 43 என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை டிசம்பர் 12 மற்றும் அதற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் கெபே அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலையும் மீறி முதியவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள கெபே அமைப்பு, தனியார் நிறுவனம் ஒன்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கைபேசிகள் வழங்கும் நிகழ்வு அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய தலைமையில் கடந்த 11ம் திகதி மாத்தறையில் இடம்பெற்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.
அதற்கு முன்னதாக டிசம்பர் 7ம் திகதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய தலைமையில் கேகாலையிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
எனினும் 2014.12.04ம் திகதி வெளியிடப்பட்ட PCE/2015/19/ALL D 16 எனும் கடிதத்தில், குறித்த நிகழ்ச்சியை எதிர்வரும் ஜனவரி 15ம் திகதிக்குப் பின் நடத்துமாறு, தேர்தல் ஆணையாளரினால் அறிவுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
இது குறித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் நேற்று குறிப்பிட்டதாக கெபே அமைப்பு அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Average Rating