காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த காதலியை கொன்ற வாலிபர்!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் துபாயில் கட்டிட காண்டிராக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ரேவதி (20). நர்சுக்கு படித்து விட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலைபார்த்து வந்தார்.
உசிலம்பட்டி அருகே உள்ள சுருளிபட்டியைச் சேர்ந்த சொக்கர் மகன் ஈஸ்வரன் (27), உறவினர் ஆவார். இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் வேலை எதுவும் பார்க்காமல் இருந்ததால் ஈஸ்வரனுக்கு ரேவதியை அவரது பெற்றோர் பெண் தரமறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஈஸ்வரன் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் பிறந்த நாளையொட்டி நேற்று ரேவதி தனது வீட்டில் இருந்தார். இதற்காக ஈஸ்வரனும் அங்கு வந்து இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாதபோது அவர், ரேவதியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். இதற்கு அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரன், சரமாரியாக கத்தியால் ரேவதியை குத்தி, கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தெரிகிறது. அப்போது அவருடன் நடந்த போராட்டத்தில் ஈஸ்வரனுக்கும் காயம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு இருந்த வாலிபர் ஈஸ்வரனை கைது செய்தனர்.
Average Rating