பொள்ளாச்சியில் கொசுவத்தி சுருளால் பெண்ணின் உடையில் தீ: காப்பாற்ற சென்ற கணவரும் படுகாயம்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி முத்துக் கவுண்டன் லே–அவுட்டை சேர்ந்தவர் செல்வக்குமார் (டிரைவர்). இவரது மனைவி காயத்ரி (வயது 30). நேற்று இரவு கணவன்– மனைவி வீட்டில் கொசுத் தொல்லைக்காக கொசு வத்தியை பற்ற வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அருகில் மண்எண்ணெய் கேன் இருந்தது. தூக்கத்தில் காயத்ரியின் கால்பட்டு மண்எண்ணெய் கேன் கவிழ்ந்து அதில் இருந்த எண்ணை காயத்ரி அணிந்திருந்த நைட்டியில் பட்டது.
அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக கொசுவத்தி சுருளில் இருந்த தீ பட்டு காயத்ரியின் உடலில் தீ மளமளவென பிடித்தது. தீயின் தாக்கத்தால் காயத்ரி அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு எழுந்த செல்வக்குமார் மனைவியின் உடலில் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் தீயை அணைக்க முயற்சி செய்தபோது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் காயத்ரிக்கு 80 சதவீத தீக்காயம் உள்ளதால் மேல்சிகிச்சைக்காக அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating