துப்பாக்கியை காட்டி கணவரை கொன்றுவிடுவதாக மிரட்டல்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெண் என்ஜினீயர் புகார்!!
மதுரை பைக்காரா அரசினர் காலனியை சேர்ந்தவர் கருப்பு. இவரது மனைவி பிரேமா (வயது25), கம்ப்யூட்டர் என்ஜினீயராக முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக பிரேமா பயிற்சி பெற்று வருகிறார்.
இவர், தனது 1½ வயது குழந்தை ரக்சனுடன் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தார். அங்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் பிரேமா கூறி இருப்பதாவது:–
திருமணத்திற்கு முன்பு எனது கணவர் கருப்பு மீது மதுரை, அவனியாபுரம், மேலக்கால், ஜெய்ஹிந்த்புரம், சுப்பிரமணியபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் தவறாமல் இன்று வரை ஆஜராகி வருகிறார்.
கடந்த 2013–ம் ஆண்டு சுப்பிரமணியபுரம் போலீசார் கருப்பு மீது பொய் வழக்கு போட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். மதுரை ஐகோர்ட்டு கிளையில் எனது கணவர் தரப்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டது தவறு என்று ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஜெய்ஹிந்த்புரம் மற்றும் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், இந்த பகுதியில் என் கணவர் இருக்கக்கூடாது என்று மிரட்டியதால் விருதுநகர் அருகே ஒரு கிராமத்தில் தங்கி மர வியாபாரம் செய்து பிழைத்து வருகிறோம்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எனது கணவரை சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு அழைத்ததின் பேரில் ஆஜரானார். அப்போது நானும் உடன் சென்றிருந்தேன். அப்போது எங்களை இன்ஸ்பெக்டர் தகாத வார்த்தைகளால் திட்டினார்.
மேலும் அவர் துப்பாக்கியை காட்டி, உன் கணவர் கருப்புவை என்கவுண்டர் செய்து விடுவேன் என்று கூறி என்னையும், என் பெற்றோரையும் துப்பாக்கி முனையில் மிரட்டினார்.
தற்சமயம் திருந்தி வாழ நினைத்து எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் என்னையும், என் குழந்தையையும் கவனித்து வரும் கணவர் மீது பொய் வழக்கு போடுவதாக மிரட்டிய சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் நானும், என் குழந்தையும் தற்கொலை செய்து கொள்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெண் என்ஜினீயர் கொடுத்த புகாரால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating