கூடலூர் அருகே பெண்ணை கொன்ற புலியை பிடிக்க 9 இடங்களில் கூண்டு!!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பிதிர்காடு கிராமம் உள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டத்துக்கு வேலைக்கு சென்ற சிவக்குமார் என்பவரது மனைவி மகாலட்சுமியை (வயது 34) புலி அடித்துக் கொன்றது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், மனிதர்களை அடித்துக் கொள்ளும் புலியை சுட்டுப்பிடிக்க வலியுறுத்தியும் பிதிர்காடு பஜார் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் சங்கர் உத்தரவின் பேரில் வனத்துறை அதிகாரி தேஜஸ்வி தலைமையில் வனத்துறையினர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்களுடன் ஊட்டியில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிரடிப்படை வீரர்களும், மருத்துவக் குழுவினரும் இணைந்து புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் புலி தென்பட்டால் மயக்க மருந்து செலுத்தி பிடிக்க முடிவு செய்துள்ளனர். அதே சமயம் ஆபத்தான நேரத்தில் புலியை சுட்டுப் பிடிக்க உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவும் பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.
புலியை பிடிப்பதற்காக பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட 9 கூண்டுகளை புலி நடமாடுவதாக கருதப்படும் பிதிர்காடு எஸ்டேட் தேயிலை தோட்டப்பகுதிகள், பாட்ட வயல், வில்குலா மற்றும் வாழைத் தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தேயிலை தோட்டப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் புலியின் உருவம் பதிவாகியிருந்தது. அதை கைப்பற்றிய வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது புலியின் உடலில் காயம் இருப்பது தெரிய வந்தது.
பெரிய விலங்குகளை புலி வேட்டையாடும் போது தாக்கப்பட்டதால் அதனால் வேகமாக நடக்க முடியவில்லை என்றும் மேலும் விலங்குகளை வேட்டையாட முடியாது என்பதால் மனிதர்களை வேட்டையாடியதும் தெரிய வந்தது.
எஸ்டேட் பகுதிகளில் புலி நடமாட்டம் இருப்பதற்கான கால் தடங்கள் உள்ளன. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் எஸ்டேட் பகுதிகளில் வேலை பார்ப்பவர்களுக்கும், பள்ளிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தனிப்படையினர் இன்று 2–வது நாளாக எஸ்டேட் பகுதியில் புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Average Rating