காங்கயம் அருகே விவசாயி வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது: நகை-பணம் மீட்பு!!
காங்கயம் நெய்க்காரன்பட்டியை சேர்ந்தவர் சாமியப்பகவுண்டர் (வயது 72). விவசாயி மற்றும் அரிசி ஆலை அதிபர். இவரது மனைவி சாமியாத்தாள் (68). இவர்கள் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள தென்னந்தோப்பில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று சாமியப்பகவுண்டர் தென்னந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது மனைவி வீட்டை பூட்டி வீட்டு டீ மற்றும் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு தோப்புக்கு புறப்பட்டார். அவரும் கணவருடன் சேர்ந்து வேலை செய்தார்.
வேலை முடிந்து மதியம் வீட்டுக்கு வந்துபார்த்தபோது கதவு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கம்பியால் நெம்பி திறக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த தம்பதி பீரோவை சோதனை செய்ததில் 40 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்தது. இது குறித்து காங்கயம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் எஸ்.பி. அமித்குமார் சிங் உத்தரவின் பேரில் காங்கயம் துணை கமிஷனர் பிச்சை மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், சப்–இன்ஸ்பெக்டர் சாஸ்தா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
பல இடங்களில் தேடுதல் மற்றும் விசாரணை நடத்தியபோது அதே பகுதியை சேர்ந்த முதுகலை பட்டதாரியான பிரகாஷ் (25) மற்றும் அவரது நண்பர்களான திருச்சி தொட்டியம் சந்தைப்பேட்டையை புதுத்தெருவை சேர்ந்த ராமன் (19), புதுத்தெருவுக்கு அருகே உள்ள கொசவம்பட்டியை மேற்கு தெருவை சேர்ந்த சேகர் (39) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதில் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அரிசி ஆலை அதிபர் வீட்டில் கொள்ளையடித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தையும் மீட்டனர்.
கைதான ராமன் ஏற்கனவே திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 5 வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவராவார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன் காங்கயம் சிவன் மலை அருகே நடந்த திருமணத்தில் கலந்து கொண்டு மொபட்டில் திரும்பிய தம்பதியை கீழே தள்ளி விட்டு அந்த பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியவர் என்பதும் தெரியவந்தது.
இது தவிர இந்த 3 பேரும் காங்கயம்–ஈரோடு ரோட்டில் உள்ள முத்தூர் என்ற இடத்தில் உள்ள விவசாயி வீட்டில் புகுந்து 3 பவுன் நகையையும் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். கைதான 3 பேரையும் போலீசார் காங்கயம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் தாராபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Average Rating