காளஹஸ்தி அருகே மாணவிகளை மசாஜ் செய்யும்படி வலியுறுத்திய ஆசிரியருக்கு அடி–உதை!!
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த சின்னதிப்பசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் டி.பிரபாகர் (வயது 45). அவர், கடந்த சில நாட்களாக பள்ளிக்கு சரியாக வருவதில்லை என கூறப்படுகிறது. அடிக்கடி லீவு போட்டுவிட்டு வீட்டிலேயே இருந்து விடுவதாக தெரிகிறது. அவர் மீது மண்டல கல்வி அதிகாரிக்கு புகார் சென்றதும், மண்டல கல்வி அதிகாரியான ஸ்ரீதேவி, பிரபாகரை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த சில நாட்களாக ஆசிரியர் பிரபாகர் பள்ளிக்கு வந்ததும், ஒரு தனி அறையில் படுத்துக்கொண்டு பள்ளியில் படித்து வரும் மாணவிகள் சிலரை அந்த அறைக்கு வரவழைத்து கை, கால்களை பிடித்துவிட சொல்வது, உடலில் மசாஜ் செய்ய சொல்வது, சாப்பிட்ட பாத்திரங்களை கழுவ சொல்வது, வகுப்பறைகளை சுத்தம் செய்ய சொல்வது உள்பட பல்வேறு வேலைகளை வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆசிரியரின் தொந்தரவை தாங்க முடியாத மாணவிகள் பலர், ஆசிரியரின் நடவடிக்கையை பற்றி தங்களின் பெற்றோரிடம் தெரிவித்தனர். அதனை கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று மாணவிகளின் பெற்றோர் பலர் பள்ளிக்கு திரண்டு வந்தனர். அவர்கள், பள்ளியை சூழ்ந்து முற்றுகையிட்டனர். ஆசிரியர் பிரபாகருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
‘‘மாணவிகளை அறைக்கு வரவழைத்து தகாத வேலைகளை செய்ய சொல்கிறீர்களாமே? என கேட்டு மாணவிகளின் பெற்றோர் ஆசிரியர் பிரபாகரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
தகவல் அறிந்ததும் மண்டல கல்வி அதிகாரி ஸ்ரீதேவி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கையை தயார் செய்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்.
Average Rating