லக்சம்பர்க் நாட்டின் அதிகாரப்பூர்வ தூதரான நடிகை..!!
பிரபல நடிகையும், சமுக ஆர்வலருமான சுஹாசினி மணிரத்னம் ‘கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்’ நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தூதராக நேற்று நியமிக்கப்பட்டார்.
கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் தூதர் சாம் ஸ்ரீநர் முறைப்படி சுஹாசினி மணிரத்னத்துக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க, விழாவில் அதிகாரப்பூர்வ தூதர்கள் மற்றும் கார்ப்பரேட் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டலில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.
விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்து சாம் ஸ்ரீநர் பேசும்போது, சுஹாசினி மணிரத்னத்தை தங்கள் நாட்டின் அதிகாரப்பூர்வ தூதராக நியமித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சுஹாசினி மணிரத்னம் 350 படங்களுக்கும் மேல் நடித்த ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல, அவர் பெண்கள் நலனிலும் ஆர்வம் கொண்ட பன்முக சிந்தனையாளர். சுஹாசினி மணிரத்னத்தை அதிகாரப்பூர்வ தூதராக நியமித்ததால் இந்தியா மற்றும் கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டினுடனான உறவு மேலும் மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பதவியேற்ற பின் பேசிய சுஹாசினி மணிரத்னம், தன்னை தூதராக நியமித்ததற்கு நன்றி கூறினார். தான் பிறந்த பரமக்குடி என்ற சிறிய ஊருடன் கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்கை ஒப்பிட்டு பேசிய சுஹாசினி மணிரத்னம், தனக்கு அளித்த பொறுப்பை செவ்வனே செய்வேன் என்று உறுதியளித்தார்.
ஒரு சினிமா நட்சத்திரம் மற்றொரு நாட்டின் அதிகாரப்பூர்வ தூதராவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating