ரூ.3½ கோடி கஞ்சா எண்ணெயுடன் கேரள வாலிபர்கள் 2 பேர் கைது!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது பெரும்பாவூர். இங்குள்ள சுங்க இலாகா அதிகாரிகள் பெரும்பாவூர்–ஆலுவாய் ரோட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே ரோந்து வந்தனர்.
அங்கு 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிப்பிடித்த அதிகாரிகள் தீவிரமாக விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள்.
சந்தேகம் வலுக்கவே அவர்களிடமிருந்த பைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். பைகளுக்குள் கேன்களில் 3 கிலோ கஞ்சா எண்ணெய் இருப்பதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கஞ்சா எண்ணெயை எங்கு கொண்டு செல்கிறீர்கள்? என்ன உபயோகத்துக்காக கொண்டு செல்கிறீர்கள்? என்று கேட்டபோது அவர்கள் கூறிய தகவல் தூக்கி வாரிப்போட்டது.
கஞ்சா எண்ணெயை பிரபல ஓட்டல்களுக்கு சப்ளை செய்வோம். அந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவார்கள். கஞ்சா எண்ணெயில் போடும் ஆம்லெட்டுக்கு வாடிக்கையாளர்களிடம் கடும் கிராக்கி.
கஞ்சா எண்ணெயில் தயாரிக்கப்படும் ஆம்லெட் சாப்பிட்டால் கஞ்சா புகைத்தது போன்றே போதை இருக்குமாம். அதனால் தான் கஞ்சா எண்ணெய் அமோகமாக விற்பனையாகிறது என்று கூறினார்கள்.
கஞ்சா எண்ணெய் கடத்தி வந்த இருவரையும் சுங்க இலாகா அதிகாரிகள் பெரும்பாவூர் போதை தடுப்பு போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் வாலிபர்கள் இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எண்ணெயின் மதிப்பு ரூ.3½ கோடி ஆகும். கைதானவர்களில் ஒருவர் சூரியநெல்லியைச் சேர்ந்த ஜோய் சாக்கோ(31) மற்றொருவர் குமுளியைச் சேர்ந்த சதீஷ்குமார்(38).
இவர்களிடம் அதிகாரிகள் விசாரித்துக்கொண்டிருந்த போது கஞ்சா எண்ணெய் சப்ளை செய்த வாலிபர் ஒருவர் பணம் வாங்க வந்தார். அதிகாரிகளின் பிடியில் தங்கள் ஆட்கள் இருப்பதைப்பார்த்து தப்பி ஓடி விட்டார்.
விசாரணையில் அவர் சூரியநெல்லியைச் சேர்ந்த பிரின்ஸ்(30) என்பது தெரியவந்தது. அவரை தீவிரமாக தேடிவருகிறார்கள்.
Average Rating