தலித் பெண் மந்திரி பற்றி தரக்குறைவான பேச்சு: ரோஜா மீது வன்கொடுமை வழக்கு!!
நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வாகி உள்ளார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர் சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்று பேசினார்.
ரோஜா தன் பேச்சின் போது, மகளிர் மேம்பாடு மற்றும் மாற்றுத் திறனாளிகள் துறை மந்திரி பீதல சுஜாதாவை விமர்சித்து பேசினார். இந்த நிலையில் பீதல சுஜாதாவை மிகவும் தரக்குறைவாக ரோஜா பேசி விட்டதாக சர்ச்சை ஏற்பட்டது.
சட்டசபையில் ரோஜா பேசிய அந்த குறிப்பிட்ட காட்சிகளும் வெளியானது. இது ஆந்திராவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து ஆந்திராவில் உள்ள தலித் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடிகை ரோஜாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த தொடங்கி உள்ளனர். மேலும் அவர்கள் ரோஜா மீது போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்து வருகிறார்கள்.
நேற்று ஒரே நாளில் மட்டும் நெல்லூர், குண்டூர், விஜயவாடா, கர்னூல், கிழக்கு கோதாவரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் தலித் அமைப்பினர் புகார்கள் கொடுத்தனர். அதன் பேரில் நடிகை ரோஜா மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே நடிகை ரோஜா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி ஆந்திர மாநில சட்டசபையில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 11–ந் தேதி ஒழுங்கு நடவடிக்கைக்குழு கூடி ரோஜா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முடிவு செய்ய உள்ளது.
இந்த நிலையில் நடிகை ரோஜா நேற்று ஐதராபாத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலம் நடத்தினார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:–
ஆளும் கட்சித் தலைவர்கள் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். நான் ஒரு நடிகை என்பதால் என்னைப் பற்றி தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்கிறார்கள். இது பற்றி நான் சொன்னால், சபாநாயகர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்.
சட்டசபையில் நான் பேசியது எப்படி வெளியில் வந்தது? இது பற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு நடிகை ரோஜா கூறினார்.
Average Rating