ரேசில் விபரீதம்: 30 அடி உயரத்தில் பறந்த காரில் இருந்த தந்தை உயிருடன் திரும்புவதை பார்க்கும் மகள்!!
இங்கிலாந்தில் நடைபெற்ற கார் ரேசில் நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் ஒரு கார் 30 அடி உயரத்துக்கு அந்தரத்தில் பறக்கும் காட்சியும், அந்த காரை ஓடிய தனது தந்தை உயிருடன் திரும்புவதை அவரது 2 வயது மகள் திகைப்புடன் பார்த்து மிரண்டுப் போன செய்தியும் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் செவெர்ன் வேல்லி பாகுதியில் தேசிய கார் ரேஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஆட்டோ கிராஸ் தகுதிச் சுற்று போட்டிகள் நேற்று யார்க் ஷைர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் தெற்கு யார்க் ஷைர் பகுதியை சேர்ந்த டாம் பார்னெஸ்(26) என்பவர் கலந்து கொண்டார்.
தனது 12-ம் வயதில் இருந்து இதைப்போன்ற ரேஸ்களில் பங்கேற்ற அனுபவம் நிறைந்த டாம், தனக்கு முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்றபோது அந்த காரின் பக்கவாட்டில் மோதிய டாமின் கார் சுமார் 30 அடி உயரத்தில் அந்தரத்தில் பறந்தது.
இந்த காட்சியை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த அவரது இரண்டு வயது மகள் ஜார்ஜியா திகைத்துப்போய் மிரட்சியுடன் கண்கொட்டாமல் விக்கித்து நின்ற வேளையில், விரைந்துவந்த அவசர உதவி குழுவினர் காரை நிமிர்த்தி டாம் பர்னெஸை வெளியேற்றினர்.
இதைப்போன்ற விபத்துகள் நடப்பது சகஜம்தான். இதில் யாரையும் குறை கூற முடியாது என்று சிரித்து கொண்டே கூறும் டாம், லேசான சிறு காயங்களுடன் உயிர் தப்பியதை கூட பெரிய விஷயமாக கருதவில்லை. தச்சு தொழிலாளியாக வேலை செய்துவரும் இவர், இந்த விபத்தில் சிக்கிய தனது காரை சரிபடுத்த ஏராளமான பணம் தேவைப்படுமே.., அதற்கு என்ன செய்வது? என சிந்தித்து கொண்டிருக்கிறார்.
Average Rating