கொடைக்கானலில் சண்டையிட்டு சமாதானம் செய்து கொள்ளும் வினோத விழா!!
மக்கள் கொண்டாடும் விழாக்களிலும், அவற்றில் இடம்பெறும் சடங்குகளிலும், பண்டைய மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் இடம் பெற்றிருக்கும். இதனால்தான் ஒவ்வொரு பகுதியிலும் விழாக்கள் வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுகின்றன. கொடைக்கானல் மேல்மலை கிராமமான கிளாவரையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாரம்பரிய விழா கொண்டாடப்படுகிறது.
அந்த காலத்தில் மன்னர் பரம்பரையை சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து மலைக்கிராமமான கிளாவரை வந்துள்ளனர். மஞ்சம்பட்டியில் குடியிருந்த ஆதிவாசி மக்களும் அங்கு இடம் பெயர்ந்து வந்தனர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க இருதரப்பை சேர்ந்த பெரியவர்களும், பேச்சுவார்த்தை நடத்தி சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
இதையடுத்து ஆதிவாசிகள் தங்குவதற்கு வீடுகள், அவர்களிடத்தில் திருமண சம்பந்தம் செய்து கொள்வது போன்ற நிலைபாட்டை மன்னர் பரம்பரை மக்கள் எடுத்தனர். மேலும் ஆதிவாசிகளுக்கு மன்னாடியார் என்ற பட்டத்தையும் கொடுத்தனர். இதனால் இருசமூக மக்களும் ஒற்றுமையாகவும், சமுதாய ஏற்றத்தாழ்வின்றி வாழ்ந்தனர்.
இதனை நினைவுகூறும் வகையில் கிளாவரை கிராம மக்கள் 12 வருடங்களுக்கு ஒருமுறை பாரம்பரிய திருவிழா கொண்டாடி வருகின்றனர்.
நேற்று நடந்த இந்த விழாவில் கிளாவரை பொதுமக்கள், ஆதிவாசிகள் மற்றும் மன்னர் பரம்பரையினர் போல் வேடமணிந்து சண்டையிட்டனர். பிறகு பெரியவர்கள் சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டது. இருதரப்பை சேர்ந்தவர்களும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இதுபோன்ற காட்சிகளை அவர்கள் அரங்கேற்றினர்.
ஆதிவாசிகளின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் இடம் பெற்றது. இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.
இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், எங்களின் பாரம்பரியத்தினை மறக்காமல் இருப்பதற்காக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழாவை கொண்டாடுகிறோம். இதனால் நாங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம் என்றனர்.
Average Rating