என் குழந்தைகளுக்கு நான் நடிகை என்பது தெரியாமலே வளர்த்தேன்: ஜோதிகா!!
ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘‘36 வயதினிலே’’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சினிமா மறுபிரவேசம் மற்றும் குடும்ப வாழ்க்கை, குழந்தைகள் பற்றி அவர் அளித்த பேட்டி வருமாறு:–
திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்தேன். குழந்தைகளை பார்த்துக் கொண்டேன். இரண்டு, மூன்று பட வாய்ப்புகள் வந்தும் ஏற்கவில்லை. சூர்யாவுக்கு நான் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.
மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த படத்தின் டி.வி.டி.யை பார்த்தோம். கதையும் கேரக்டரும் பிடித்து இருந்தது. எனக்கு பொருத்தமான கேரக்டராக இருப்பதாக சூர்யா சொன்னார். வில்லன்கள் கிடையாது. வலிமையான பெண்களை பற்றிய கதை. எனவே நடிக்க சம்மதித்தேன்.
என் குழந்தைகள் நான் நடித்த படங்களை இதுவரை பார்த்தது இல்லை. அவர்கள் என்னையும் சூர்யாவையும் பெற்றோர்களாகத்தான் பார்க்க வேண்டும். நடிகர்களாக பார்க்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எனவே பொது விழாக்களுக்கு அவர்களை அழைத்து போகாமல் தவிர்த்தேன்.
பள்ளியில்கூட சக மாணவர்களின் பெற்றோர்கள் எங்களுடன் சகஜமாக பழகும்படி பார்த்துக் கொண்டோம். இப்போது குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். அவர்கள் முதன்முதலாக ‘36 வயதினிலே’ பாடல் வெளியீட்டு விழாவில்தான் பங்கேற்றனர். என்னை முதல் முறை இந்த படத்தில் நடிகையாக பார்ப்பதில் திரில்லர் ஆக உள்ளனர்.
படப்பிடிப்புக்கு இருவரையும் அழைத்து போனேன். அவர்கள் நான் நடித்ததை பார்த்ததைவிட கேரவேனைதான் வியப்பாக பார்த்தார்கள். திருமணமான புதிதில் தமிழ் அவ்வளவாக தெரியாது. இப்போது நன்றாக பேச கற்றுக் கொண்டேன். பெண்களுக்கு குழந்தைகள்தான் முக்கியம். அவர்கள் ஒரு நிலைக்கு வரும்வரை வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.
இவ்வாறு ஜோதிகா கூறினார்.
Average Rating