மனநிலை பாதிக்கப்பட்ட மகனை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை!!
செஞ்சி அருகே வத்ஷிலம் புறஓடை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி சரிதா (வயது 32), பி.எட். பட்டதாரி. இவர்களுக்கு தமிழ்செல்வன் (14), தமிழ்மணி (9) ஆகிய 2 மகன்கள்.
இதில் தமிழ்மணிக்கு மூளை வளர்ச்சி குன்றியும் மற்றும் இதய நோயும் இருந்து வந்தது. இதற்காக தமிழ்மணிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த ஆனந்தன் கடந்த 2 வருடத்துக்கு முன்பு நடந்த விபத்தில் இறந்து போனார்.
இதையடுத்து சரிதா தனது மகன்களுடன் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் உள்ள தாய் வீட்டில் தங்கி மகன்களை படிக்க வைத்து வந்தார். தொடர்ந்து தமிழ்மணிக்கு சிகிச்சை அளிக்க பெற்றோர் வீட்டில் சரிதா பணம் கேட்டபோது அவர்கள் பணம் கொடுக்க மறுத்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையளிக்குமாறு கூறியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த சரிதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று காலை தமிழ்மணியை அழைத்துக் கொண்டு வத்ஷிலம் புறஓடை கிராமத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்தார். அங்கு தமிழ்மணிக்கு, சரிதா தேனில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் விஷத்தை குடித்துவிட்டார். சிறிது நேரத்தில் இருவரும் இறந்து போனார்கள்.
இதுபற்றி அறிந்ததும் நல்லான்பிள்ளை பெற்றாள் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Average Rating