பாலியல் புகாருக்கு ஆளான பச்சோரி அமெரிக்கா செல்ல கோர்ட் அனுமதி!!
ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைப்பு டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக இருந்த ராஜேந்திர பச்சோரி, அலுவலகத்தில் உள்ள ஒரு பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இதுபற்றி டெல்லி அதிகாரிகள் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
தன் மீதான பாலியல் புகார்களை பச்சோரி மறுத்து உள்ளார். இதற்கிடையில் இவ்வழக்கு தொடர்பாக போலீசார் தன்னை கைது செய்ய கூடாது என முன்ஜாமின் வாங்கியுள்ள பச்சோரி, அமெரிக்காவில் உள்ள தனது உறவினர் இறந்துப் போனதாகவும், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதையேற்று கொண்ட மாஜிஸ்திரேட் ஷிவானி சவுகான், தலா 2 லட்சம் ரூபாய்க்கான இரண்டு ஜாமின்தாரர்களின் உத்திரவாதத்தை அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் வரும் 29-ம் தேதியில் இருந்து ஜூலை 9-ம் தேதி வரை 10 நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதி அளித்தார். அமெரிக்கா சென்றடைந்ததும் அங்குள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராகி, எந்தெந்த இடங்களுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது? என்ற தகவலை அளிக்க வேண்டும். அங்கிருந்து வேறெந்த நாட்டுக்கும் செல்ல கூடாது.
ஜூலை 9-ம் தேதிக்குள் இந்தியாவுக்கு திரும்பி இந்த கோர்ட்டுக்கும் இவ்வழக்கை விசாரித்துவரும் அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் பச்சோரி அமெரிக்க செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Average Rating