சூலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி: 15–க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!
கோவையை அடுத்த சூலூர் ஒன்றியம் பதுவம்பள்ளி ஊராட்சி செல்லம்பராயம்பாளையம் ஏ.டி காலனி பகுதியை சேர்ந்தவர். சரவணகுமார், இவரது மனைவி பானுப்பிரியா இவர்களின் மகள் புவனேஸ்வரி (வயது 7). இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தார்.
இவருக்கு கடந்த 15 நாள்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் உள்ள வாகராயம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சாதாரண காய்ச்சல் என்று டாக்டர்கள் மாத்திரைகள் மட்டும் வழங்கினர். ஆனாலும் காய்ச்சல் குறையாததால் புவனேஸ்வரியை அவரது உறவினர்கள் கடந்த 18–ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக சிறப்பு பிரிவில் சேர்த்து தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் புவனேஸ்வரி உயிரிழந்தார். மேலும் பதுவம் பள்ளிபகுதியை சேர்ந்த 15–க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பதுவம் பள்ளி பகுதியை சேர்ந்த கண்ணன் மனைவி மல்லிகா (35), மகள் நந்தினி (17), பழனி என்பவரின் மகள் மரகதம் (30), உள்ளிட்டோர் கடந்த 1 வாரமாக அன்னூர் அரசு ஆஸ்பத்தரியில் காய்சலுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, கடந்த ஒருவாரமாக இந்த பகுதிக்கு வரும் குடிநீர் செந்நிறத்தில் வருவதாக புகார் செய்தனர். மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
Average Rating