கோத்தகிரி அருகே 6 ஆடுகளை அடித்துக் கொன்ற சிறுத்தை!!
கோத்தகிரி அருகே தவிட்டுமேடு, டர்மோனா, கட்டக்கல் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமங்களில் பொதுமக்கள் ஆடுகளையும் மாடுகளையும் வளர்த்து வருகிறார்கள்.
தவிட்டுமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40) .கூலி தொழிலாளி. இவர் தனது 4 ஆடுகளை அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். இந்த நிலையில் மாலையில் ஆடுகள் வீடு திரும்பாததால் தேயிலை தோட்டத்துக்கு சென்று பார்த்தார்.
அப்போது அங்கு 4 ஆடுகளும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் வனச்சரகர் முஸ்தபா தலைமையில் வனவர் சந்திரமோகன் வனக்காப்பாளர் முருகன் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் ஆடுகளை கால்நடை டாக்டர் ராஜன் பரிசோதனை செய்த பின்னர் அங்கேயே இறந்த ஆடுகளை புதைக்கப்பட்டன.
இதே போல் டர்மோனா பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் என்பவரது 2 ஆடுகளையும் சிறுத்தை அடித்துக் கொன்றது. டர்மோனா குடியிருப்பின் அருகில் உள்ள புதர் மறைவில் இருந்து சிறுத்தைபுலி 2 ஆடுகளை அடித்து கொன்றது.
இதனால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே தவிட்டுமேடு, டர்மோனா பகுதியில் உலாவரும் சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும் போது தவிட்டுமேடு பகுதியில் 4 ஆடுகளையும் டர்மோனா பகுதியில் 2 ஆடுகளையும் சிறுத்தை அடித்து கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். சிறுத்தை புலி ஆடுகளை அடித்துக் கொன்றதால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Average Rating