திருச்சி அருகே தொழிலாளியின் மனைவியை காரில் கடத்திய போலீஸ்காரர்: டி.ஐ.ஜி.யிடம் கணவர் புகார்!!
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் தம்புசாமி. இவரது மகன் டேனியல் ஜேம்ஸ்(27). ஆயுதப் படை பிரிவு போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
டேனியல் ஜேம்சின் தாய் மற்றும் சகோதரி ஆகிய இருவரும் சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். இதனால் புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகர் பேட்டையிலுள்ள நண்பரான தொழிலாளி டேவிட்(40) என்பவரது வீட்டிற்கு சென்ற டேனியல் ஜேம்ஸ் தனக்கென தற்போது யாரும் இல்லை, எனவே நான் உங்கள் வீட்டில் சில நாட்கள் தங்கி கொள்கிறேன் எனக் கூறி அவரது வீட்டில் தங்கியுள்ளார்.
இதை தொடர்ந்து டேவிட்டிற்கும், டேனியல் ஜேம்சுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் டேனியல் ஜேம்ஸ் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 21–ந் தேதி டேவிட் மனைவி சகாயராணி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சமையல் செய்து கொண்டிருந்த சகாயராணியை காரில் கடத்தி செல்ல முயன்றனர். அவரது சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பொதுமக்கள் காரை வழிமறித்தனர். ஆனால் அந்த கும்பல் சகாயராணியுடன் காரில் தப்பி சென்றுவிட்டனர் .
இது குறித்து கல்லக்குடி போலீசில் சாகாயராணியை கடத்திய காரின் நம்பர் மற்றும் கடத்திய கும்பல் குறித்து டேவிட் புகார் கொடுத்துள்ளார்.
டி.ஐ.ஜி.யிடம் புகார்
கல்லக்குடி போலீசார் இதுவரை வழக்கு பதிவு செய்யாததால் தற்போது டி.ஐ.ஜி செந்தாமரைக் கண்ணனிடம் டேவிட் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் டேனியல் ஜேம்ஸ் உள்பட 5 பேர் கும்பல் தனது மனைவி சகாயராணியை கடத்தி சென்றதாகவும், அவரிடம் இருந்து தனது மனைவி சகாயராணியை மீட்டு தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Average Rating