பெற்ற தாயே கடைசி நேரத்தில் கைவிட்ட நிலையில் மருமகளை காப்பாற்ற கிட்னியை தானம் அளித்த அபூர்வ மாமியார்!!
மாமியாரை வில்லியாக மட்டும் டி.வி. தொடர்களில் பார்த்துப் பழகிப்போன பலருக்கு இந்த செய்தியை ஜீரணித்துக் கொள்ள சற்று சிரமமாக இருந்தாலும் பெற்ற தாயே கடைசி நேரத்தில் கைவிட்ட நிலையில் மருமகளை காப்பாற்ற தனது கிட்னியை தானம் அளித்த மாமியாரின் பாசம் மருமகளும் ஒரு மகளே என்பதை சுட்டிக்காட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது.
மேற்கு டெல்லியில் உள்ள உத்தம்நகர் பகுதியை சேர்ந்த கவிதா(36) என்பவரின் இரு சிறுநீரகங்களும் கெட்டுப்போய் செயலிழந்த நிலையில் உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவருக்கு தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக அளிக்க கவிதாவின் தாயார் முன்வந்தார்.
அதற்கான பரிசோதனைகள் எல்லாம் முடிந்து ஆபரேஷனுக்கான தேதியும் குறிக்கப்பட்ட நிலையில், தனது முடிவை அவர் திடீரென மாற்றிக் கொண்டார். அடுத்தது என்ன..? என்று அனைவரும் கையை பிசைந்து கொண்டு நின்றபோது தனது மருமகளின் உயிரை காப்பாற்ற கவிதாவின் மாமியாரான விமலா(65) முன்வந்தார்.
இதையடுத்து, கடந்த மாதம் 23-ம் தேதி விமலாவின் உடலில் இருந்து விடைபெற்று கொண்ட ஒரு சிறுநீரகம் வெற்றிகரமாக கவிதாவின் உடலில் பொருத்தப்பட்டது.
இந்த ஆபரேஷனுக்கு பிறகு விமாலவின் சிறுநீரகம் கவிதாவின் உடலில் சரியான முறையில் இரத்த சுத்திகரிப்பு வேலையை செய்து வருவதாகவும், மாமியார்- மருமகள் இருவரின் உடல்நிலையும் தேறி வருவதாகவும் டெல்லி பி.எல்.கே. சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
Average Rating