வைட்டமின் மாத்திரைக்குள் கொசு: பெண் பரபரப்பு புகார்!!
மும்பை, சயான் பகுதியில் வசித்து வருபவர் ரம்யா (வயது 32). இவர் டாக்டர் ஒருவரின் அறிவுரையின் பேரில் சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் வினியோகித்து வரும் வைட்டமின் மாத்திரைகளை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சாப்பிட்டு வந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவர் வழக்கம் போல் வைட்டமின் மாத்திரை ஒன்றை சாப்பிட எடுத்தார். அப்போது மாத்திரைக்குள் ஏதோ இருப்பதை பார்த்தார். இதையடுத்து அவர் மாத்திரையின் உள் உற்று பார்த்தபோது அதில் செத்த நிலையில் கொசு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் சம்பந்தப்பட்ட வைட்டமின் மாத்திரை நிறுவனத்திற்கு கடிதம் எழுதிய போது அவர்கள் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் தவறுக்காக சில வைட்டமின் மாத்திரைகளை இலவசமாக வழங்கியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த வைட்டமின் மாத்திரை நிறுவனத்தின் மீது ரம்யா உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையினரிடம் புகார் அளித்து உள்ளார். மேலும் நுகர்வோர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடிவு செய்து உள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரம்யா கூறுகையில், “குறிப்பிட்ட அந்த நிறுவன வைட்டமின் மாத்திரை சாப்பிட கர்ப்பிணி பெண்கள் டாக்டர்களால் அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் அதில் இதுபோன்ற செத்த பூச்சிகள் இருப்பதை ஏற்று கொள்ள முடியாது. அந்த வைட்டமின் மாத்திரை தயாரிக்கும் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
ரம்யாவின் புகார் உண்மையென கண்டுபிடிக்கப்பட்டால் குறிப்பிட்ட வைட்டமின் மாத்திரை நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை ஆணையர் ஹர்ஷ்தீப் காம்ளே கூறினார்.
Average Rating