இடுக்கி அருகே தனியார் மருத்துவமனையில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தை!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்தவர் ரகீம். இவருடைய தாயார் ஆயிஷா. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரகீம் சேர்த்தார். பின்னர் அவரை தனது மனைவி பிஸ்மி, மகன் முகமது (வயது 2½) ஆகியோருடன் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று தாயை பார்த்து வந்தார்.
அதன்படி நேற்று முன்தினம் வழக்கம் போல் தனது தாயை பார்ப்பதற்காக மனைவி, மகனுடன் ரகீம் சென்றார். பின்னர் ஆயிஷா இருந்த அறையில் உள்ள ஒரு ஜன்னல் வழியே குழந்தைக்கு பிஸ்மி வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தையின் தலை ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கியது.
இதனையறியாத முகமது தலையை திரும்ப எடுக்க முயன்றான். அப்போது கம்பிகள் தலையை அழுத்தவே அவன் அழத்தொடங்கினான். இதைக்கண்ட பிஸ்மி தனது குழந்தையை காப்பாற்றும்படி கூறி கதறி அழுதார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் அங்கு ஓடிவந்தனர். பின்னர் குழந்தை சிக்கிய பகுதியில் இருந்த கம்பிகளை சுமார் ஒருமணி நேரம் போராடி அவர்கள் துண்டித்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். அதன் பிறகே குழந்தையின் பெற்றோர் நிம்மதியடைந்தனர்.
Average Rating