நீர்வேலியில் சமூகச்சீரழிவை தடுத்து நிறுத்த முற்பட்டவர்களுக்கு வாள் வெட்டு…!!
வலி.கிழக்கு பிரதேச செயலக பொலிஸ், பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டத்தில் நீர்வேலியில் நடைபெற்றுவரும் சமூக விரோதச் செயலை கண்டித்து கருத்து வெளியிட்டு அதனைத் தடுத்து நிறுத்தக் கோரிய நபர் மீது நேற்றுமுன்தினம் நள்ளிரவு வாள்கள்,
பொல்லுகளுடன் சென்ற கும்பல் வாள் வெட்டை மேற்கொண்டதுடன் குறித்த நபரின் உறவினரையும் கடத்த முயற்சித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நீர்வேலிப் பகுதியில் கடந்த வாரம் நள்ளிரவு சட்டவிரோத மது விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து மது அருந்திய கும்பல் ஒன்றை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலும் அதற்கு முன்னர் நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற சமூக விரோதச் செயல்கள் தொடர்பிலும் கருத்துக்களை கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற வலி.கிழக்குப் பிரதேச செயலக பொலிஸ், பொது மக்கள் நல்லுறவுக் கூட்டத்தில் வாள் வெட்டுக்கு இலக்கான குறித்த நபர் தெரிவித்து அவற்றை தடுத்து நிறுத்தவும் அங்குள்ள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இக்கலந்துரையாடலின் பின்னர் நீர்வேலிப் பகுதியில் இடம்பெறும் திருட்டுக்களையும் சமூக விரோதச் செயல்களையும் தடுப்பதற்காக அப்பகுதி மக்கள் இரவு வேளை விழிப்புக் குழு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையிலேயே கடந்த செவ்வாய்க்கிழமை அப்பகுதிக்கு தடிகள், பொல்லுகள், வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று அங்கு நின்ற குறித்த நபர் மீது வாள் வெட்டினை மேற்கொண்டதுடன் அவரின் வீட்டுக்குச் சென்று அவரது உறவினரையும் கடத்த முற்பட்டிருந்தனர்.
இதன்போது அங்கு கூடிய பொது மக்களினால் குறித்த கும்பல் விரட்டப்பட்டு கடத்தல் முயற்சியும் தடுக்கப்பட்டிருந்தது.
இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றதனையடுத்து நீர்வேலிப் பகுதி வாழ் மக்கள் ஒன்று திரண்டு நேற்றைய தினம் காலை தமக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி வலி.கிழக்குப் பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பினை மேற்கொண்டனர்.
இதன்போது பிரதேச செயலகத்தின் செயலர் பிரதீபன், மக்களுடன் கலந்துரையாடி யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடமும் குறித்த பிரச்சினையைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது குறித்த பிரச்சினைக்கு மாவட்ட பொலிஸ் அதிகாரியுடன் தொடர்பு கொண்டு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க அதிபர் உறுதி மொழி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating