காதல் ஜோடிக்கு தஞ்சம் அளித்த விவசாயி கைது!!
வேப்பூர் அருகே விளம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை, விவசாயி. இவரது மகள் மகாலட்சுமி (வயது 17). இவர் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ. பள்ளியில் படித்து வந்தார். அதே ஐ.டி.ஐ. பள்ளியில் சிறுபாக்கத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் உதயசூரியன் (22) என்பவரும் படித்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 2 மாதத்துக்கு முன்பு மகாலட்சுமி ஐ.டி.ஐ.க்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு மகாலட்சுமி வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் மகாலட்சுமி இல்லை.
பின்னர் விசாரித்ததில் மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உதயசூரியன் கடத்தி சென்றிருப்பது பூமாலைக்கு தெரியவந்தது. மேலும் இந்த காதல் ஜோடி கள்ளக்குறிச்சி அருகே லட்சியம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கலியன் (39) என்பவர் அடைக்கலம் கொடுத்து தங்க வைத்து இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பூமாலை இதுகுறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் திருமண வயதை எட்டாத (மைனர் பெண்ணை) எனது மகளை உதயசூரியன் கடத்தி சென்று விட்டதாகவும், இவர்களுக்கு கலியன் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும் புகாரில் கூறினார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால் போலீசார் தேடி வருவதை அறிந்த காதல் ஜோடி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.
இதையடுத்து காதல் ஜோடிக்கு அடைக்கலம் கொடுத்த கலியனை போலீசார் கைது செய்தனர்.
Average Rating