மடிப்பாக்கத்தில் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்த போது கிணற்றில் விழுந்த பிளஸ்–2 மாணவி!!
மடிப்பாக்கம் முத்து முகமது தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் சுப்ரஜா (17). பிளஸ்–2 மாணவியான இவர், நேற்று அதிகாலை 4.45 மணி அளவில் வேதியியல் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார்.
தனது வீட்டு வளாகத்திலேயே அங்கும் இங்கும் நடந்தபடியே படித்துக் கொண்டிருந்த சுப்ரஜா, அங்கிருந்த தரைக் கிணற்றை கவனிக்காமல் கால் வைத்துவிட்டார். சுற்றுச்சுவர் இல்லாமல் இருந்ததால் 30 அடி ஆழ கிணற்றில் அவர் தவறி விழுந்தார்.
வீட்டுக்கு வெளியில் நின்று படித்துக் கொண்டிருந்த சுப்ரஜா திடீரென காணாமல் போனதால் அவரது பெற்றோர் பதறினர். யாரிடமும் சொல்லாமல் கடைக்கு பால் வாங்க போயிருக்கலாமோ என்று நினைத்து அருகில் உள்ள கடைக்கும் சென்று பார்த்தனர். சுப்ரஜா அங்கும் இல்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கிணற்று பக்கமாக போய் பார்த்தனர். அப்போது, கிணற்றில் இருந்து சுப்ரஜா கூப்பிடும் சத்தம் மெதுவாக கேட்டது.
இதுபற்றி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து பொறுப்பு தீயணைப்பு வீரர் ராமலிங்கம் மற்ற வீரர்களுடன் விரைந்து சென்றார். அதிகாலை நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசல் எதுவும் இல்லாமல் இருந்தது. இதனால் விரைவாக சென்றுவிட்ட தீயணைப்பு வீரர்கள் சேர் போன்ற வடிவில் இருக்கும் மீட்பு கயிறு மூலமாக 10 நிமிடத்தில் சுப்ரஜாவை பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.
அவரது காலில் மட்டும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. லேசான பதட்டத்துடன் காணப்பட்ட சுப்ரஜாவை கிணற்றில் இருந்து மேலே தூக்கியதும், ‘‘மணி என்ன? பரீட்சைக்கு போகணும்’’ என்று ஆர்வமாக கேட்டுள்ளார்.
இதன் பின்னர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சுப்ரஜாவை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் காயத்துடன் சென்று வேதியியல் தேர்வை எழுதினார். சுப்ரஜாவின் மன தைரியத்தை குடும்பத்தினர் பாராட்டினார்.
Average Rating