ஆப்கானிஸ்தானில் இந்திய, பாகிஸ்தான் தூதரகங்கள் அருகே தற்கொலை படை தாக்குதல்: 6 பேர் பலி…!!
ஆப்கானிஸ்தானில் இந்திய மற்றும் பாகிஸ்தான் தூதரகங்கள் அருகே மீண்டும் தற்கொலை படைதாக்குதல் நடந்தது. அதில் 6 பேர் பலியாகினர். 2 அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் காபூல் அருகேயுள்ள மஷார்–இ–சரீப் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது கடந்த 3–ந்தேதி தாக்குதல் நடத்த தலிபான் தீவிரவாதிகள் முயன்றனர். ராக்கெட் குண்டுகளை வீசியும், துப்பாக்கி சூடும் நடத்தினார்கள்.
திபெத்–இந்திய எல்லை பாதுகாப்புபடை மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களும் இத்தாக்குதலை முறியடித்தனர். இதில் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் உயிரிழந்தார். 9 பேர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவம் நடந்த 10 நாட்களுக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள மற்றொரு இந்திய தூதரகம் அருகே தீவிரவாதிகள் தற்கொலைபடை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜலாலாபாத்தில் இந்திய தூதரகம் உள்ளது. அதன் மீது தாக்குதல் நடத்த ஒரு தற்கொலைபடை தீவிரவாதி வாகனத்தில் அதிவேகமாக வந்தான். 200 மீட்டர் தூரத்தில் வந்த போது அவனை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவன் தான் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தான்.
அதில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்பட 6 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
இத்தாக்குதலால் ஜலாலா பாத் இந்திய தூதரகத்துக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. அங்கு பணிபுரிபவர்களும், தங்கியிருப்பவர்களும் பாதுகாப்புடன் உள்ளனர் என வெளியுறவுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்கொலைப்படை தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் தூதரம் அருகே ஆப்கான் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடயே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் தூதரகத்திற்கு அருகே உள்ள வீடு ஒன்றின் உள்ளே இருந்து 3 பேர் இந்த தாக்குதலை நடத்துவதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டினை தொடர்ந்து அருகில் உள்ள பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஜலாலாபாத் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating