விருதுநகர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற இளம்பெண்…!!
விருதுநகர் அருகே உள்ள மேலஆமத்தூரை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மூத்த மகள் ருக்மணி (வயது 27). அழகர்சாமி தனது சகோதரி மகன் சதீஷ் (32) என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ருக்மணியை திருமணம் செய்து கொடுத்தார். இவர்கள் இருவரும் அழகர்சாமியின் வீட்டிலேயே வசித்து வருகின்றனர்.
சதீஷ் மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சனோஜ் (4) என்ற ஆண் குழந்தையும், சத்தியப்ரியா (2) என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.
ருக்மணி கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு, 2 குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் ருக்மணியின் சகோதரி முத்துலட்சுமி, ருக்மணியையும், குழந்தை களையும் தேடி சென்றார். அப்போது தந்தை அழகர் சாமியின் தோட்டத்தில் ருக்மணி நின்று கொண்டிருந்ததை கண்ட முத்துலட்சுமி அவரிடம் குழந்தைகளை எங்கே என கேட்டார். இதற்கு ருக்மணி, குழந்தைகள் இருவரையும் கிணற்றில் வீசி விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி இதுபற்றி தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார். இதைதொடர்ந்து அழகர் சாமியும், கிராம மக்களும் தோட்டத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் கிடந்த குழந்தைகளை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் குழந்தைகள் இருவரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்து விட்டனர். பின்னர் 2 குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த ஆமத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில மாதங்களாக ருக்மணிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாத நிலை இருந்ததாகவும் தெரியவந்தது. வேறு எந்த பிரச்சினையும் இல்லை என ருக்மணி குடும்பத்தாரும், கிராமமக்களும் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ருக்மணியை கைது செய்தனர்.
Average Rating