தேவகோட்டை அருகே குடும்ப பிரச்சினையில் புதுமாப்பிள்ளை எரித்துக்கொலை: மனைவி கைது…!!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருப்பாக்கோட்டையை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது31). மலேசியாவில் வேலை பார்த்து வந்த இவருக்கும், சீலமேகநாடு கிராமத்தைச் சேர்ந்த ரேகா (23) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணமான சில நாட்களிலேயே மகேஸ்வரன் மீண்டும் மலேசியாவுக்கு சென்று விட்டார். இந்நிலையில் ‘தலைப்பொங்கலை’ கொண்டாடுவதற்காக மகேஸ்வரன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.
அன்றைய நாளில் இருந்தே கணவன்–மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு மது குடித்து விட்டு அதிக போதையில் மகேஸ்வரன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன்–மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. 2 பேரும் ஒருவரையொருவர் தகாதவார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். சிறிது நேரத்தில் மகேஸ்வரன் போதை மயக்கத்தில் தூங்கி விட்டார்.
ஆனாலும் ரேகாவுக்கு கணவன் மீது இருந்த கோபம் குறையவில்லை. ஆத்திரம் அடங்காத அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து மகேஸ்வரன் உடலில் ஊற்றி தீ வைத்தார். பின்னர் ரேகா வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டார்.
வீட்டில் இருந்து புகை வெளியானதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தனர். அங்கு உடல் கருகிய நிலையில் மகேஸ்வரன் பிணமாக கிடந்தார்.
இந்த நிலையில் கணவனை எரித்துக்கொன்ற ரேகா தேவகோட்டை தாலுகா போலீசில் சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்–இன்ஸ்பெக்டர் சையதுஅலி ஆகியோர் ரேகாவை கைது செய்தனர்.
திருமணமான 5 மாதத்தில் மனைவியே கணவனை எரித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating