தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஓரிரு நாட்களில் 600 விஏஓக்கள் இடமாற்றம்…!!
சட்டசபை தேர்தலையொட்டி சேலம் உள்பட 4 மாவட்டங்களில் பணியாற்றும் 600 கிராம நிர்வாக அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்யும் 600 கிராம நிர்வாக அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காவல் மற்றும் வருவாய்த் துறையைச் சேர்ந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 3 ஆண்டுகளாக ஒரே ஊரில் வேலை செய்பவர்கள், தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், சொந்த மாவட்டத்தினர், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் ஆகியோரை வகைப்படுத்தி இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து காவல் துறை அதிகாரிகள் பலர் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இடமாற்றம் செய்யப்பட வேண்டிய 600 கிராம நிர்வாக அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவாய்த் துறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அதிகாரிகள் இன்னும் ஓரிரு நாட்களில் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
Average Rating