அமெரிக்காவில் பரவும் துப்பாக்கி கலாசாரம்: குடும்பத்தினரை சுட்டுக்கொன்றவர், தானும் தற்கொலை…!!
அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம், சியாட்டில் அருகேயுள்ள பெர்பேர் பகுதியில் ஒப்பந்தக்காரர் ஒருவர் வசித்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்த நிலையில், ரஷியாவில் இருந்து 2 ஆண் குழந்தைகளையும், சீனாவில் இருந்து ஒரு பெண் குழந்தையையும் தத்து எடுத்து வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் ஒப்பந்தக்காரர், நேற்று திடீரென தன் மனைவி, குழந்தைகளை சுட்டுக் கொன்றார்.
இது தொடர்பாக அவரே போலீசாரை தொடர்பு கொண்டு, தான் தன் மனைவி, குழந்தைகளை கொலை செய்து விட்டதை தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து வந்து அவரை சரண் அடையுமாறு கூறினர். 3 மணி நேரம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் சரண் அடைய மறுத்து, கடைசியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எதற்காக இத்தகைய விபரீத முடிவை எடுத்தார் என தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் பற்றி அந்த பகுதியில் வசித்து வருகிற ஜேக் பிகாட் என்பவர் கூறும்போது, “இங்கு குடும்பத்தினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமானதுதான். நான் துப்பாக்கியால் சுடும் சத்தம் தொடர்ந்து கேட்டபோது, அதை பயிற்சி என்றுதான் நினைத்து விட்டேன். ஆனால் அந்த வீட்டுக்காரர் தன் குடும்பத்தினரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது இப்போதுதான் தெரிய வந்தது. இது ஒரு பயங்கரமான சம்பவம்” என குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பரவி வருவது, அந்த நாட்டு மக்களை பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.
Average Rating