எதிர்கட்சி தலைவருடன் பகிரங்க விவாதம் நடத்த ஜனாதிபதி இணக்கம்
ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பகிரங்க விவாதம் நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். முக்கிய பிரச்சினைகள் குறித்த எதிர்கட்சியின் கேள்விகளுக்கு பதிலளிக்க தாம் தயார் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். யுத்தம் சட்டம் ஒழுங்கு மற்றும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட நாட்டின் எரியும் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுத்திட்டங்களை முன்வைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தவறியுள்ளதாக எதிர்கட்சித்தலைவர் குற்றம் சுமத்தியிருந்தார். யுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பில் எதிர்கட்சியின் கேள்விகளுக்கு பகிரங்க மேடையில் பதிலளிக்க முடியுமா? என அண்மையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு சவால் விடுத்திருந்தார். எனினும் ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் விடுத்த பகிரங்க சவாலை ஏற்றுக்கொண்டு விவாதமொன்றுக்குச் செல்ல தயார் என அறிவித்துள்ளார். மக்கள் மத்தியில் இந்த விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் காலிமுகத்திடலில் இதனை நடத்த முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Average Rating