ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைக் கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் கணபதி கனகராஜ்
ஜனாதிபதித் தேர்தலில் இனவாதிகளுக்கும் இனவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துபவர்களும் எதிராக சிறுபான்மைத் தமிழ்ப் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பற்றி சிந்திக்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் தற்போது இடம்பெறும் அரசியல் நகர்வுகளை அவதானிக்கும் போது சிறிபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் புறக்கணித்து விட்டு ஆட்சியை தங்கவைப்பதும் ஆட்சியை கைப்பற்றுவதும் என்ற நோக்கத்தை அடைவதற்கான ராஜதந்திர முனைப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது புலனாகிறது. இதற்கு சிறுபான்மைத் தமிழ்பேசும் மக்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது சிறுபான்மை மக்களுக்கு ஏற்புடைய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல் இலங்கை அரசியலில் தற்போதைக்கு இல்லை என்பது தேசிய கட்சிகளின் போக்கிலிருந்து தெரிகிறது ஆனால் சிறுபான்மை மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்கு இம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை சொற்ப சலுகைகளுக்காக பேரம் பேசும் படலம் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் புறந்தள்ளிவிட்டு இரண்டு தேசிய கட்சிகளின் தேவைக்கான தீர்மானமே எடுக்கப்படுகிறது எமது மக்களை இந்தநாட்டில் இரண்டாந்தர பிரஜைகளாக தள்ளிவிட முடியாது சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றுபட்ட அரசியல் சக்தியாக பரிணமித்து தேசிய ரீதியில் அரசியல் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தும்வகையில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதி ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது பொருத்தமானதாகும் என்றார்.
Average Rating