இலங்கையர்கள் உட்பட்ட 135சட்டவிரோத குடியேறிகள் துருக்கிய படைத்தரப்பினரால் கைது!
இலங்கையர்கள் உட்பட்ட 135சட்டவிரோத குடியேறிகளை துருக்கிய படைத்தரப்பினர் கைதுசெய்துள்ளனர். துருக்கியின் ஐடின் மாகாணத்தில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐரோப்பாவுக்குச் சட்டவிரோதமாக நுழைய தயாரான நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் துருக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதுசெய்யப்பட்டவர்களில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், மியன்மார், பாலஸ்தீனம் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் துருக்கி அரச செய்தி சேவையான அன்டோலியன் தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியான தகவல் ஒன்றின்படி, துருக்கியில் சுமார் 01மில்லியன் சட்டவிரோத குடியேறிகள் உள்ளனரெனத் தெரியவருகின்றது. அத்துடன் வருடம் ஒன்றுக்கு 03லட்சம் சட்டவிரோத குடியேறிகள் துருக்கிக்குள் பிரவேசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் 163 நாடுகளில் இருந்து வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் பணியாளர்கள், கட்டிடத் தொழிலாளிகள் மற்றும் சமையற்காரர்கள் என்ற அடிப்படையிலேயே இவர்கள் துருக்கிக்குள் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating