கருணா படையினர் தாக்குதல் 4 புலிகள் சுட்டுக்கொலை
இலங்கையில் கருணா படையினர் நடத்திய தாக்குதலில் 4 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற கருணா தலைமையிலான போராளிகள், தனிப்பிரிவாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் மீது கருணா படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வாகரை என்ற இடத்தில் தாக்குதல் நடந்தது. இதில் 4 விடுதலைப்புலிகள் பலியானார்கள். இத்தாக்குதல் நடந்ததை விடுதலைப்புலிகளும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் தங்கள் தரப்பில் ஒருவர் மட்டுமே பலியானதாக கூறி உள்ளனர். திரிகோணமலை மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் இலங்கை ராணுவ வீரர் ஒருவர், விடுதலைப்புலிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அன்னன் கண்டனம் தெரிவித்துள்ளார். `எந்த காரணம் சொல்லியும் இத்தகைய வன்முறையை நியாயப்படுத்த முடியாது. பேச்சுவார்த்தையை தொடங்க இருதரப்பினரும் முயற்சிகளை இருமடங்காக அதிகரிக்க வேண்டும்’ என்று கோபி அன்னன் கூறியுள்ளார்.
மனித வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 2002-ம் ஆண்டு போர் நிறுத்தத்துக்கு முன்பு இருந்ததைப்போல் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ராணுவம் கூறியுள்ளது.