20 ரூபாய் தரமறுத்த வாலிபரை கத்தியால் குத்திக் கொன்ற கூல்டிரிங்ஸ் கடை உரிமையாளர்!!
டெல்லியின் தெற்கு பகுதியில், கூல்டிரிங்க்ஸ் குடித்து விட்டு பணம் கொடுக்காத நபரை கடை உரிமையாளர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மால்வியா நகர் பகுதியின் சிராக்டெல்லியில் உள்ள தெருவோரக் கடைக்கு, நேற்று மதியம் சுனில் குமார் என்பவர் தனது நண்பருடன் கூல்டிரிங்க்ஸ் குடிப்பதற்காக வந்துள்ளார். இருவரும் ஆளுக்கு 2 கிளாஸ் என்று கூல் டிரிங்க்ஸ் குடித்துள்ளனர். ஒரு கிளாஸ் 5 ரூபாய் என்பதால் கடைக்காரர் தீபக், சுனிலிடம் 20 ரூபாய் கேட்டுள்ளார். என்ன காரணத்தினாலோ சுனில் பணம் தர மறுத்திருக்கிறார்.
இதனால் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆவேசமடைந்த தீபக் கடையில் வைத்திருந்த கத்தியால் சுனிலின் வயிற்றில் குத்தினார். ரத்தம் பெருக்கெடுக்க, சுனில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவருடன் வந்திருந்த நண்பர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுனிலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிர்கி பகுதியில் உள்ள வீட்டில் வைத்து தீபக்கை கைது செய்த போலீசார், அவர் கொலைக்கு உபயோகப்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். சுனில் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating